திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.13 திருவியலூர்
பண் - நட்டபாடை
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.
1
ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்
ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.
2
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
உம்மென்றெழும் அருவித்திறள் வரைபற்றிட உறைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.
3
அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.
4
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.
5
வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.
6
மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.
7
பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.
8
வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.
9
தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.
10
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com